Latest News
Thursday, May 24, 2018

சிலோன் டீ'க்கு சீனாவில் மிகையான கேள்வி

சிலோன் டீ'க்கு சீனாவில் மிகையான கேள்வி

இலங்கையில் வருடமொன்றுக்கு 350KG மில்லியன் தேயிலை உற்பத்தி
இலங்கையின் தேயிலை உற்பத்திக்கு சீனச்சந்தையில் சிறந்த கேள்வி இருப்பதால் அங்கு ஆழமாக காலூன்றுவது தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளது என்றும், தேயிலை மீள்உற்பத்தி சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை தேயிலைச் சபை ( திருத்தச்) சட்டமூலம்மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

“ 2015 ஆம் ஆண்டு 240 மில்லியனுக்கு இறங்கிய தேயிலை உற்பத்தியை 2017 இல் 307 மில்லியன்வரை அதிகரிக்ககூடியதாக இருந்தது. 2015 இல் ரூ. 350 இற்கும் 400 இற்கும் விலைப்பட்ட விலையிலிருந்த ஒருகிலோவுக்கான விலையை ரூ. 600- 650 வரை உயர்வடைந்துள்ளது. கடும் சவால்களுக்கு மத்தியிலும் கூட்டு முயற்சியால் இந்த நிலையை அடையமுடிந்தது.

தேயிலைச்சபைக்குரிய சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியை, நிதி அமைச்சு எடுக்கமுற்பட்டபோது அதற்கு எதிராக துறைசார் அமைச்சர் என்ற வகையில் நான் போரானேன். நிதியையும் தக்கவைத்துக்கொண்டேன். நிதி மீள எடுக்கப்படுமானால் அமைச்சுப் பதவியை துறப்பேன் என்றும் அறிவித்திருந்தேன். தேயிலைச்சபை இன்று சுயாதீனமாக செயற்படுகின்றது. கொள்கை ரீதியிலான தீர்மானங்களையே நான் எடுத்துவருகின்றேன். உயர்பதவிகளுக்கு திறமையானவர்களே நியமிக்கப்பட்டுவருகின்றனர்.
அதேவேளை, ‘சிலோன் டீ’ என்பதே எமது வர்த்தக நாமம். ‘தூய தேயிலை’ என்ற நன்மதிப்பும் எமக்கிருக்கின்றது. அந்த பெயருக்கு எவ்வித களங்கமும் இன்னும் ஏற்படவில்லை. அந்த நாமத்தை பாதுகாத்துவருகின்றோம். கென்யாவிவால் கூட ‘தூய கென்யா டி’ யென கூறமுடியாது. எம்மால் அதை தைரியமாக கூறமுடியும். தேயிலையில் கலப்பு உற்பத்தியென்பது பாதக விளைவை ஏற்படுத்தக்கூடும். விலையில்கூட அது தாக்கத்தை செலுத்திவிடும். இதனால்தான் இதற்கு இடமளிக்கப்படுவதில்லை.

சீனாவிலுள்ள அனைத்து சந்தைகளிலும் இலங்கைத் தேயிலைக்கு மிகையான கேள்வி இருக்கின்றது. சீன விவசாய அமைச்சர்கூட பாராட்டு தெரிவித்திருந்தார். மாற்று சந்தையாகக்கூட எம்மால் அந்நாட்டை பயன்படுத்தமுடியும். இலங்கையில் 350 மில்லியன் கிலோ தேயிலையே உற்பத்திசெய்யப்படுகின்றது. உலக சந்தையில் அது 10 சதவீதத்துக்கும் குறைவான பங்காக இருக்கின்றது.எனினும், சிறந்த விலை. தூய தேயிலை என்பதாலேயே நல்ல விலை கிடைக்கின்றது. அதை பாதுகாக்கவேண்டும்.
எம். ஆர். சி. பி. என்ற களைநாசினி பயன்படுத்தப்பட்டதால் ஜப்பானில் எமது தேயிலை ஏற்றுமதிக்கு சிக்கல் ஏற்பட்டது. கிளைபோசைட் களைநாசினிக்கு பதிலாகவே அது பயன்படுத்தப்பட்டது. கிளைபோசைட் களைநாசினி சந்தையிலிருந்து முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இதனால், தேயிலைத்துறைக்கு பாதிப்பும் ஏற்பட்டது.
கிளைபோசைட் பாவனையால் எமது மக்களுக்கு பாதிப்பில்லை என்றும், எம்.ஆர்.சி.பி. பாவிப்பதே சிக்கலை ஏற்படுத்தும் என்றும் ஜப்பான் அறிவித்தது.
இது பற்றி நான் அமைச்சரவையில் கூறினேன். எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தேயிலை உற்பத்திக்கு மாத்திரம் கிசைபோசைட் பயன்படுத்தும் அனுமதியை ஜனாதிபதியிடமிருந்து பெற்றேன். இதற்கான வர்த்தமானி விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். தேவையானளவு கிளைபோசைட் களைநாசினியை சிறுதோட்ட உரிமையாளர்களுக்கு வழங்கும் வகையில் பொறிமுறை வகுக்கப்படும்.
  • Like us
  • Comments
Item Reviewed: சிலோன் டீ'க்கு சீனாவில் மிகையான கேள்வி Rating: 5 Reviewed By: pachai thangam