Latest News
Monday, April 30, 2018

தோட்டத் தொழிலாளர்களின் விடிவுக்காக அறவழியில் போராடிய நடேசய்யர்!


ஊழியப்படையணியின் உரிமைக்குரல் விண்ணதிர முழங்கும் விடுதலை நாள் இன்றாகும். அடிமைகளாக வலம்வந்து வீழ்ந்தே வாழ்ந்து மடிவதைவிட, தலைநிமிர்ந்து வாழவேண்டுமென்ற இலட்சியத் தீயை தொழிலாளர்கள் மனங்களில் மூட்டிவிடும் புரட்சிநாளே மேதினமாகும்.
முதலாளிவர்க்கத்தின் அடக்குமுறை பிடிக்குள்ளிலிருந்து விடுதலைபெறவேண்டுமென 18 ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். உலகம் முழுவதிலும் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன. இதில் 1886 இல் சிக்காக்கே போராட்டத்தை மறந்துவிடமுடியாது. அந்த போராட்டமே இன்றைய நாளுக்கு வித்திட்டது. எனவே, உழைக்கும் மக்களுக்கு ‘பச்சை தங்கம்’ மலர்தூவி மரியாதை செலுத்துவதுடன், வாழ்த்துகளையும் மாரியாக பொழிகின்றது.
எமது மலையக மக்களும் கொத்தடிமைகளாகவே அன்று வழிநடத்தப்பட்டனர். அடிமைச்சங்கிலியை உடைத்தெறிவதற்கு பலவழிகளில் அவர்கள் முயற்சித்தும், பெரும்பாலான நடவடிக்கைகள் கைகூடவில்லை. காரணம், பலமானதொரு தொழிற்சங்க கட்டமைப்பு இருக்கவில்லை.

அதை உருவாக்கிய பெருமை நடேசய்யரையே சாரும். இன்றைய நாளில் அவர் குறித்து பார்ப்பது சிறப்பாக இருக்குமென்றே நினைக்கின்றோம். காரணம், தொழிலாளர்களுக்காக வாழ்ந்தவர். வாழ்நாளில் அவர்களுக்காகவே காலத்தை ஒதுக்கியவர் என்றால் அது மிகையாகாது.
தமிழகத்தின் தஞ்ஞாவூரில் 1887ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி கோதண்டராம ஐயருக்கும், பகீரதம்மாளுக்கும் மகனாக பிறந்தார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேர்ச்சிபெற்ற அவர், அநீதிக்கு எதிராக பொங்கியெழும் குணத்தையும், போராடும் பண்பையும் கொண்டிருந்தார். பாரதியின் புரட்சிபாடல்களை நிஜமாக்க நினைத்தவர்.
தேசபக்தம் பத்திரிகை

தொழில்துறையில் டிப்ளோமா பெற்ற அவர், ஆசிரியராகவும், பத்திரிகையாசிரியராகவும் பணிபுரிந்துள்ளதுடன், தஞ்ஞாவூரில் வர்த்தக வங்கியை அமைப்பதற்கு முன்னின்று செயற்பட்டார். அனைத்து வர்த்தகர்களையும் ஒரு குடையின்கீழ் கொண்டுவந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தனது நண்பரொருவரின் உதவியுடன் கொழும்பில் தென்னிந்திய வியாபாரிகள் சங்கக் கிளையொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். தென்னிந்திய வர்த்தர்களின் செல்வாக்கு இலங்கையில் கோலோச்சியிருந்த காலப்பகுதி அது. அந்த சங்கத்தின் ஆண்டுவிழா 1919 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நடேசய்யர் கொழும்பு வந்தார்.
தமது விடுதலைக்காக போராடுவதற்காக விடிவெள்ளியொன்று உதயமாகியுள்ளது என்பதை தொழிலாளர்கள் அறிந்துவைக்கவில்லை. நடேசய்யரின் கொழும்புவருகைதான் எம்மவர்களுக்கான திருப்புமுனையென கூறினாலும் அது பிழையாகாது.
இலங்கைவந்த அவருக்கு, தென்னிந்தியாவிலிருந்து கைக்கூலிகளாக அழைத்துவரப்பட்ட தமது சொந்தங்களை பார்க்கவேண்டும் என்ற ஆசை உருவானது. வெளியாருக்கு தோட்டங்களுக்கு செல்வதற்கு கெடுபிடிகள் இருந்ததால், புடவை வியாபாரிபோல் வேடமிட்டே, மலையகம்சென்று எம்மக்களை நோட்டமிட்டார் மாமேதை நடேசய்யர்.
தொழிலாளர்களின் துயர்நிலைகண்டு மனமுடைந்துபோய்விட்டார். எதையாவது செய்தால் சிக்கலாகிவிடும் எனகருதி கண்ணீருடன் தமிழகம் திரும்பினார் அவர்.
கடும் சினத்துடன் திரும்பிய அவர், மௌனம் காக்கவில்லை. அங்கு நடப்பவற்றை முக்கிய பிரமுகர்களுக்கு தெளிவுபடுத்தினார். மலையக மக்களின் விடுதலைக்காக குரல்கொடுக்க வேண்டும் என அனைவரிடமும் ஒத்துழைப்பு கோரினார். 1920 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு வந்தார்.
கொழும்பிலிருந்து தனது நண்பர்களுடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்ததுடன், மக்கள்மீதான பார்வையையும் விரிவுப்படுத்தினார். 1921 ஆம் ஆண்டு ‘தேசநேசன்’ என்ற பத்திரிகையையும் வெளியிட்டார். இதற்கு இலங்கையிலிருந்த சில தமிழ் தொழிற்சங்க பிரமுகர்கள் உதவிபுரிந்திருந்தனர்.
கடும் போட்டிகளுக்கு மத்தியில் இலங்கை சட்டநிறுபன சபையிலும் இடம்பிடித்தார். மேற்படி சபையில் இலங்கையில் வாழும் இரு இந்தியர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் தொழிற்சங்க தந்தையென கருதப்படும் குணசிங்கவோடு இணைந்தும் பணியாற்றினார். கருத்து முரண்பாடு காரணமாக 1928 இல் வெளியேறினார். மலையக தோட்டத்தொழிலாளர்களுக்காக ‘ அகில இலங்கை இந்திய தோட்டத் தொழிலாளர் சங்கம்’ என்ற தொழிற்சங்கத்தையும் ஆரம்பித்தார்.

கொழும்பில் தொடர்ந்தும் இருக்காது ஹட்டனுக்கு சென்றார். தொழிற்சங்க தலைமையகத்தையும் அங்கேயே உருவாக்கினார். பத்திரிகையூடாக தொழிற்சங்க பணிகளையும் தீவிரமாக முன்னெடுத்தார். அவரின் மனைவியான மீனாட்சியம்மாளும் பக்கபலமாக இருந்தார்.
தனது மனைவி மீனாட்சியம்மாளுடன் நடேசய்யர்

இதனால் தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பித்தது.
ஊ~hரடைந்த தோட்டநிர்வாகம், தோட்டத்துக்குள் நுழைவதற்கு நடேசய்யருக்கு தடைவிதித்தது. இந்த தடை உத்தரவுக்கு அவர் அடிபணியவில்லை. தோட்டங்களுக்கு அருகிருள்ள நகரங்களில் கூட்டங்களை நடத்தினார். 1931 ஆம் ஆண்டு ஹட்டன் நகரில் நடந்த மேதினக்கூட்டத்தை மறந்தவிடமுடியாது.
இப்படி மலையகம் எங்கிலும் தொழிலாளர்களுக்காக போராடினர். அவருக்கு எதிராக முதலாளிவர்க்கம் பலகோணங்களில் வதந்திகளை பரப்பியது. இதனால், சருக்கலும் ஏற்பட்டது.
1947 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 11 ஆம் திகதி நடேசய்யர் மரணமடைந்தார். இறுதிச்சடங்குகளை தந்தை செல்வாவே முன்னின்று நடத்தினார். கொழும்பில் பூதடவுல் தகனம் செய்யப்பட்டது.
மலையக மக்களின் விடுதலைக்காக அறவழியில் போராடிய இவர், ‘காந்தி நடேயச்சர்’ என்றும் அழைக்கப்பட்டார். இவரை என்றும் நாம் மறக்கமுடியாது.
எழுத்து – ஆர்.எஸ். பிறை
மூலம் - அந்தனி ஜீவாவின் காந்தி நடேசய்யர் நூல், தமிழ் விக்கிப்பிடியா.
படங்கள் - நமது மலையகம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
- பச்சை தங்கம்-
  • Like us
  • Comments
Item Reviewed: தோட்டத் தொழிலாளர்களின் விடிவுக்காக அறவழியில் போராடிய நடேசய்யர்! Rating: 5 Reviewed By: pachai thangam